ஐந்து மாதத்தில் 25 பெராரி கார்கள் விற்றிருக்கின்றன. ஒரு காரின் விலை இரண்டரைக் கோடி ரூபாய்.
* ஓராண்டில் 300 போர்ஷே கார்களை இந்தியர்கள் வாங்கியிருக்கிறார்கள். இந்த வகை கார் ஒன்றின் விலை ரூ. 2.80 கோடி.
* அவுரங்காபாத்தைச் சேர்ந்த ஒருவர், தனக்கும், தனது நண்பர்களுக்கும் 151 மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை வாங்கியுள்ளார். ஒன்றின் விலை ரூ. 1 கோடி.
இதெல்லாம், பஸ் கட்டண உயர்வுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பும் நமது இந்தியாவில்தான்.
ஆடம்பர மோக அலை இந்தியா முழுவதையும் மூழ்கடித்து வருகிறது என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். இந்த `ஆடம்பர வெறி’, கார்களில் மட்டும் அல்ல.
தனிநபர்களுக்குச் சொந்தமான ஜெட் விமானங்கள் இந்திய வானில் சீறுகின்றன. பெரும் மாளிகைகளும், ஆடம்பர அடுக்ககங்களும் எழுந்து வருகின்றன. சொகுசான ஆடம் பரத்தை அளிக்கும் உல்லாசக் கப்பல்களில் இந்தியர்கள் அதிகம் குதூகலிக்கிறார்கள். குறிப்பிட்ட ஆடம்பர `பிராண்ட்’தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் இளம் பணக்காரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். அதனால்தான், ஆடம்பரப் பொருட்களுக்கான இந்தியச் சந்தை ஆண்டுக்கு 20 சதவிகிதம் அளவுக்கு வளர்ந்து வருகிறது. தற்போது 800 கோடி டாலர்களுக்கு மேல் இருக்கும் இந்தச் சந்தை மதிப்பு, 2015-ல் ஆயிரத்து 400 கோடி டாலர்களுக்கு மேல் எகிறும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியர்களின் ஆடம்பர மோகத்தை பயன்படுத்திக்கொள்ள சர்வதேச ஆடம்பர `பிராண்ட்கள்’ இந்தியாவை குறிவைக்கின்றன. கையில் தாராளமாகப் பணம் புரளும் இளந்தலைமுறையினர், சிறுநகரப் பெரும் பணக்காரர்கள், ஆறிலக்க சம்பள உயர் நிர்வாகிகள் ஆகியோரே மேற் குறிப்பிட்ட பிராண்ட்களின் இலக்கு. பணத்தை தண்ணீ யாய்… இல்லையில்லை, காற்றாய் செலவழிக்க இவர்கள் தயாராயிருக்கிறார்களாம்.
சர்வதேச ஆடம்பரப் பொருள் விற்பனை நிறுவனமான பர்பெரியின் தலைமைச் செயல் அலுவலர் ஏஞ்சலா அஹ்ரண்ட்ஸ், “எங்களுக்கு இந்தியா விரைவாக வளர்ந்து வரும் சந்தை” என்கிறார். இவர்களுக்கு இந்தியாவில் 7 கடைகள் இருக்கின்றன.
“ஆடம்பரத் தொழில்துறைக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆர்வமூட்டு வதாக இருக்கப் போகின்றன” என்கிறார் இவர்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை ஆடம்பரப் பொருள் விற்பனை நிறுவனங்களின் கவன மெல்லாம் டெல்லியிலும், மும்பையிலும்தான் இருந்தது. தற்போதோ சிறுநகரப் பெரும் புள்ளிகளும் `மெட்ரோ’ நகர வசதி பார்ட்டிகளின் சந்தோஷங்களைத் தேடுவதால், ஆடம்பர விற்பனையாளர்களின் பார்வை அவர்கள் மீதும் பதிகிறது. எனவே இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் கூட ஆடம்பர வசதிகளும், பொருட்களும் குவிகின்றன.
போர்ஷே, பெராரி போன்ற காஸ்ட்லி கார்களின் விற்பனை முகவரான ஆஷிஷ் சோர்டியா, கடந்த ஆண்டு கான்பூரில் மட்டும் 10 போர்ஷேக்களை விற்றிருப்பதாகக் கூறுகிறார். இந்த ஆண்டும் இன்னும் அதிகமான கார்களை விற்க முடியும் என்று நம்புகிறார்.
இன்னும் சிலர் ஆடம்பர வசதிகள் நிறைந்த கார்களை உலக அளவில் தேடிப்பிடித்து ஆர்டர் செய்கிறார்களாம். “அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு 3 முதல் 6 மாத காலத்துக்குப் பின்புதான் கார் கிடைக்கும். ஆனால் அவர்கள் காத்திருப்பதற்கு ஏற்றபடி அவை சிறந்த கார்களாகத்தான் இருக்கும்” என்கிறார் இவர். கடந்த ஆண்டு 312 வாடிக்கையாளர்களுக்கு போர்ஷே கார் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. மே முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 20 பெராரிகளுக்கு ஆர்டர் வந்திருக்கிறது.
இந்தியாவில் ஆடம்பரப் பொருட்களை வாங்குபவர்களில் 50 சதவீதம் பேர் சிறுநகரங்கள், ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்கிறது ஒரு சமீபத்திய புள்ளிவிவரம். புதிய ஆடம்பர விற்பனையகங்களில் 25 சதவீதம், டெல்லி, மும்பை நகரங்களுக்கு வெளியே திறக்கப் படுகின்றனவாம்.
புதிய நகரங்களில் ஆடம்பரப் பொருட்களை நாடுவோரில் பெரும்பாலானவர்கள் வெளி நாடுகளில் படித்த இளந்தலைமுறையினர். அவர்கள் ஆடம்பர பிராண்ட்கள், சுகபோக வாழ்க்கை வசதிகள் பற்றி நன்கு அறிந்தவர்கள்.
இன்டர்குளோப் எஸ்டாபிளிஸ்ட் என்ற விமான நிறுவனம், இந்தியாவில் 45 சிறிய ரக விமானங்களைத் தனியாருக்கு விற்றுள்ளது. கார்கள், விமானங்கள் மட்டுமின்றி, ஆடை, அணிகலன்கள், நட்சத்திர உணவகங்களில் சாப்பாடு, நகைகள், கடிகாரங்கள் என்று கணக்குப் பார்க்காமல் இந்தியர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள்.
நட்சத்திர உணவகமான `லெபுவா ஓட்டல்ஸ்’, இந்தியா முழுவதும் கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள இந்த உணவகங்களில் இந்தியர்கள் பெருமளவு உணவு உண்பதுதான் இதற்கான காரணம்.
“தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள எங்களது உணவகத்துக்கு வருகை தருவோரில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள். அவர்கள் ஒருவேளை உணவுக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் தேடி நாங்கள் இந்தியாவிற்கே வருகிறோம்” என்று கூறித் திகைக்க வைக்கிறார், லெபுவா ஓட்டல்ஸின் சி.இ.ஓ. தீபக் ஓரி.
இந்தியாவில் தலா 25 கோடி ரூபாய் சொத்துள்ள கோடீசுவரர்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டளவில், இன்றிருப்பதைவிட மூன்று மடங்கு அதிகரிக்குமாம்! அப்போது 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் அந்த கோடீஸ்வர பட்டியலில் இணைந்திருப்பார்கள். இவர்கள் பர்ஸை திறக்க தயங்கமாட்டார்கள் என்பதால், `ஆடம்பர’ நிறுவனங்கள் அதிகுதூகலத்தில் இருக்கின்றன.
மொத்தத்தில், இனியும் இந்தியாவை ஏழைகளின் நாடு என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லைதான்!
No comments:
Post a Comment